உள்ளூர் செய்திகள்

ஆற்றில் குதித்த பெண்ணை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2022-07-03 04:46 GMT   |   Update On 2022-07-03 04:46 GMT
  • ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஆற்றில் குதித்த சித்ராவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • வைகை ஆற்றில் நிலக்கோட்டை அணைப்பட்டி வரை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி:

வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறுக்கம்பட்டியை சேர்ந்த சஞ்சீவ்குமார் மனைவி சித்ரா என்பவர் வைகை அணை பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் சித்ராவை மீட்க முடியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஆற்றில் குதித்த சித்ராவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை 2வது நாளாக அவரை தேடி வருகின்றனர்.

வைகை ஆற்றில் நிலக்கோட்டை அணைப்பட்டி வரை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 69 கன அடி நீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52.77 அடியாக உள்ளது. 572 கன அடி வருகிறது.

Similar News