பள்ளி மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற வாலிபர்: நிலக்கோட்டையில் பரபரப்பு
- சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா நட்பாக பழகி வந்தார்.
- சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சித்ரரேவு கிராமத்தை சேர்ந்த மாவீரன் மனைவி பார்வதி (வயது 45). இவருக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவரது 3வது மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துராஜ் மகன் குணா (வயது 25) என்பவர் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கூறினார். ஆனால் திருமணத்திற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க குணா, அவரது தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்களும் சேர்ந்து முயன்றுள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டாக்டர்கள் கர்ப்பத்தை கலைக்க முடியாது எனக் கூறினர்.
இதனால் கர்ப்பத்திற்கு குணாதான் காரணம் என யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் பார்வதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி புகாரை பெற்றுக்கொண்டு சிறுமியை சீரழித்த குணா மற்றும் உடந்தையாக இருந்த முத்துராஜ், ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகிய 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.