உள்ளூர் செய்திகள்

பூக்குழி இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா - பெண்கள் உள்ளிட்ட 188 பேர் பூக்குழி இறங்கினர்

Published On 2023-06-10 08:37 GMT   |   Update On 2023-06-10 08:37 GMT
  • பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 1-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 4-ந் தேதி கரகம் நிகழ்ச்சியும், 7-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.

8 -ந் தேதி திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் காவடிக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்களுடன் திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 7.25 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட 188 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News