பொங்கல் விழாவை தொடங்கி வைத்த மேயர் தினேஷ்குமார்.
நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கலை முன்னிட்டு பொங்கலிட்ட பெண்கள்.
3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா
- முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
- திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 3000 பெண்கள் கலந்துகொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .
இதில் அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர் . இதனை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட பொங்கல் விழாவினை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது . சமத்துவ பொங்கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம் , பெருஞ்சலங்கை ஆட்டம் , பறை இசை நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது . இதை காண திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.