ஓட்டப்பிடாரம் அருகே ரூ. 45 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர் திருட்டு; 2 பேர் கைது
- காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.
- திருட்டுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குதிரை குளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இடத்தில் காற்றாலை மற்றும் சோலார் பேனல் அமைக்க பயன்படும் உபகரணங்களை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் வைத்துள்ளது.
அங்கு குதிரைக்குளத்தை சேர்ந்த மதியழகன் (வயது 45) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அங்கு வைக்கப்படும் காப்பர் வயர்கள் அடிக்கடி திருட்டு போய் உள்ளது. இது குறித்து நிறுவனத்தின் மேலாளர் அருண்குமார் ஆய்வு நடத்திய போது அங்கிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கடந்த 14-ந் தேதி பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் காவலாளி மதியழகன், கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய வேனையும் அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.