உள்ளூர் செய்திகள்

செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வரி ஆலோசகர் உட்பட 2 பேரிடம் ரூ.68 லட்சம் மோசடி

Published On 2023-11-11 15:03 IST   |   Update On 2023-11-11 15:03:00 IST
  • பகுதி நேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறும் செய்தி வந்தது.
  • அதை நம்பி வங்கி கணக்கில் ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் தியாகராஜன் இவர் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25 ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் பேரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது. அதற்கு விண்ணப்பித்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த குறுஞ்செய்தியில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தியாகராஜன் பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசிய நபர் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லி உள்ளார். அதன்படி ரூ.59,11,250 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடிய வில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியாகராஜன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தகிரி அருகேயுள்ள பொதிகை நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவரது மகன் பரந்தாமன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வாட்ஸ்ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதில் விண்ணப்பித்து முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து பரந்தாமன் அதில் இருந்த செல்போன் எண்ணில் பேசி விவரம் கேட்டுள்ளார்.

அப்போது போனில் பேசிய மர்ம நபர் சொன்ன வங்கி கணக்கில் ரூ.8,88,000 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது முடிய வில்லை. இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த 2 மோசடி வழக்குகள் குறித்தும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். படித்த பட்டதாரி வாலிபர்களிடம் ஆன்லைன் மூலமாக ரூ.68 லட்சம் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நேற்று முன் தினம் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் இதே பாணியில் ரூ.57.87 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News