உள்ளூர் செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

திட்டக்குடி அருகே 3 வீடுகளில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2022-10-28 07:26 GMT   |   Update On 2022-10-28 07:26 GMT
  • பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என தேடிப் பார்த்தனர்.
  • பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.

திட்டக்குடி, அக்.28-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி (45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள், பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா என தேடிப் பார்த்தனர். நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கு பிரிட்ஜ்யில் வைத்திருந்த கறி குழம்பு, சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டுகளை பின்புறம் உள்ள வயலில் எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மனைவி விஜயலட்சுமி (27), கை குழந்தையுடன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்றார். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து வந்த விஜயலட்சுமி வீடடின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அரை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் வீட்டிற்கு பின்புறம் இருந்த மற்றொரு வீட்டிலும் பீரோவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருதத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பாகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News