சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை உண்ணும் கால்நடைகள்.
மன்னவனூரில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளை உண்ணும் கால்நடைகளுக்கு ஆபத்து
- மன்னவனூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிக்காமல் ஆட்டுப்பண்ணை அருகே கொட்டி வருகின்றனர்
- மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் வன உயிரினங்கள் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள நெகிழிகளை உண்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னவனூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிக்காமல் ஆட்டுப்பண்ணை அருகே கொட்டி வருகின்றனர். மலைக்கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் வனத்தில் உள்ள வன உயிரினங்கள் அதை சாப்பிட்டு உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொடைக்கானலிலும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளில் அதிகம் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் வன உயிரினங்கள் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள நெகிழிகளை உண்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும்.