உள்ளூர் செய்திகள்

குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரை வேதனையுடன் பார்க்கும் பெண்கள்.

குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

Published On 2023-01-04 09:45 GMT   |   Update On 2023-01-04 09:45 GMT
  • சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.
  • மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தர பாண்டியன் நகர், லாலி நகர், இ.எம்.ஜி. நகர். இந்த பகுதி ஜெபமாலைபுரம் அருகே அமைந்துள்ளது.

இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் காலியிடங்களில் கழிவுநீர் தேங்கியது.

ஆனால் உடனடியாக கழிவு நீர் வெளியே செல்லாமல் அப்படியே தேங்கியது. கடந்த 3 மாதங்களாக தேங்கி நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கழிவு நீரை வெளியேற்றி சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேலவெளி பஞ்சாயத்து மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது:-

முறையான வடிகால் வசதி இல்லாததாலும், சரிவர தூர்வாராத காரணத்தாலும் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பெய்த கனமழையால் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை நின்ற பிறகும் கழிவுநீர் அப்படியே தேங்கியது.

இந்த பகுதி வழியாக வரும் கழிவு நீர் இங்குள்ள கோவில் அருகே ஒரு ஆற்றில் கலக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் போதிய வடிகால் வசதி, சரிவர தூர்வாராததால் செல்ல வழி இல்லாமலும், அடைப்பு ஏற்பட்டதாலும் கழிவுநீர் தெருவுக்குள் புகுந்தது.

நாட்கள் செல்ல செல்ல கழிவு நீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அனைத்து குடியிருப்புகளை சுற்றிலும் 3 மதங்களாக தேங்கி நிற்கிறது.

இதனால் வீட்டில் வசிக்க கூட முடியவில்லை . துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி விடுமோ என அச்சத்தில் உள்ளோம்.

இது தவிர விஷ பூச்சிகள் வீட்டிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளதால் அச்சத்தில் உள்ளோம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலும் உள்ளது.

மேலும் போர் தண்ணீரும் நிறம் மாறி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும்.

இதுபோன்று கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரியான வடிகால் வசதி ஏற்படுத்தி வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News