உள்ளூர் செய்திகள்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2022-12-16 12:15 IST   |   Update On 2022-12-16 12:15:00 IST
  • பூண்டி ஏரியில் கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
  • பூண்டி ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊத்துக்கோட்டை:

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பூண்டி ஏரியில் கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் ஆந்திராவிலும் பலத்த மழை பெய்தது. நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம். சி. ஆகும். மழை நீர் வரத்தால் அந்த அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையில் 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

பலத்த மழை பெய்ததால் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதில்லை. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி நவம்பர் 8-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி விதம் திறக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுக்காதது, பூண்டி ஏரியில் இருந்து திருந்த விடப்படும் நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து ஏரிக்கு பூண்டி தண்ணீர் திறப்பு நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டது.

வினாடிக்கு 1300 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.10 அடியாக பதிவானது.

2.854 டி.எ்ம. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து 2 ஆயிரத்து 300 கன அடியாக உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Similar News