பாலிஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ்
- வட மாநில வாலிபர்களுக்கு அடி உதை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தேவி.
இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தேவியிடம் நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து தேவி பீரோவில் இருந்து 3 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து வட மாநில வாலிபர்களிடம் பாலிஷ் போடுவதற்காக கொடுத்துள்ளார்.
வாலிபர்கள் நகைக்கு பாலிஷ் போடுவது போல ஏமாற்றி தேவியிடம் கவரிங் நகைகளை கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாட மாநில வாலிபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதை அறிந்த தேவி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் துரத்திச் சென்று வட மாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தரும அடி கொடுத்தனர். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வட மாநில வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
போலீசார் வட மாநில வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.