வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 101 நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம் தொடங்கிய போது எடுத்த படம்.
101 நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம்
- பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகம் நடக்கிறது
- இன்று சிறப்பு ஹோமம், பூஜைகள் நடந்தது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி 25-ம்தேதி முதல் வருகிற மாசி மாதம் 7-ம்தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள யாகம் நேற்று தொடங்கியது.
அதன்படி நேற்று முதல் பிப்ரவரி 19-ம்தேதி முடிய ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய 3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது.
2-வது நாளான இன்று ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.மேலும் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு
ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும் சிறப்பு ஹோமமும், பால், பன்னீர், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.வருகிற ஐப்பசி 30-ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி மற்றும் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம் ஆகியவையும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
மேலும் 16-ம்தேதி அகில உலக புரோகிதர்கள் மற்றும் புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.