உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சுறா பீலிகளை வனத்துறையினர் பார்வையிட்டனர்.

கடல் அட்டைகள், சுறா பீலிகள் பதுக்கல்: 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

Published On 2022-08-24 13:32 IST   |   Update On 2022-08-24 13:32:00 IST
  • கீழக்கரையில் கடல் அட்டைகள், சுறா பீலிகள் பதுக்கிய 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அவற்றின் மதிப்பு பல கோடி என வனத்துறையினா் கூறினா்.

ராமநாதபுரம்

கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கடல் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீழக்கரை அருகே பெரியபட்டினம் சல்லித்தோப்புப் பகுதியில் தனியாா் தோட்டத்தில் கடல் அட்டைகள், சுறா பீலிகள் பதுக்கிவைக்கப்ப ட்டிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கீழக்கரை வனச்சரகா் செந்தில்குமாா் மற்றும் அலுவலர்கள் பெரிய பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 8 மூட்டைகளில் சுமாா் 250 கிலோ சுறா பீலிகள் இருந்தன. தோட்டத்தில் மேலும் சோதனையிட்ட போது பதப்படுத்தப்பட்ட சுமாா் 1000 கிலோ கடல் அட்டைகள் 22 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு பல கோடி என வனத்துறையினா் கூறினா்.

சுறா பீலி மற்றும் கடல் அட்டைகளுடன் அங்கிருந்த நாட்டுப்படகு, 10 கேன்களில் இருந்த டீசல் ஆகியவற்றையும் வனத்துறையினா் கைப்பற்றினா்.

இது தொடர்பாக அந்த தோட்டத்தில் காவல் பணியில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த செல்வம் (வயது36), ரஞ்சித் (35) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து இவர்கள் தொடர்பில் யார்? யார்? உள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதில் தொடர்புடைய ராமநாதபுரத்தை சேர்ந்த விஜயானந்த் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News