உள்ளூர் செய்திகள்

தண்ணீர் கேன்களில் கடத்தியது விவசாய உரம்-கடலோர எஸ்.பி. விளக்கம்

Published On 2022-12-01 08:17 GMT   |   Update On 2022-12-01 08:17 GMT
  • போதைபொருட்கள் அல்ல, தண்ணீர் கேன்களில் கடத்தியது விவசாய உரம் என்று ராமநாதபுரம் கடலோர எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.
  • ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது 25 லிட்டர் கொண்ட 30 தண்ணீர் கேன்களில் வெள்ளை நிற பவுடர் 394 கிலோ இருந்தது தெரியவந்தது. அவை போதைப்பொருட்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இது தொடர்பாக காரில் வந்த கீழக்கரை சங்குழித்தெருவைச் சேர்ந்த சாப்ரஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் கேன்களில் இருப்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உர மூலப்பொருட்கள் எனவும், அதனை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனாலும் சந்தேகமடைந்த போலீசார் அந்த பவுடர்களை சோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் உர மூலப்பொருட்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் எஸ்.பி. சுந்தரவடிவு வெளி யிட்டுள்ள அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பவுடர்கள் போதைப்பொருட்கள் அல்ல, அவை இயற்கை உரங்கள். அதிக பணம் மதிப்புடைய இதனை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.

இந்த செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் சாப்ரஸ் நவாஸ், ஜெயினுதீன் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் மண்டபம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News