உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2023-10-10 11:59 IST   |   Update On 2023-10-10 11:59:00 IST
  • ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை
  • இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சியில் கன்னுத்தோப்பு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆழ்குழாய் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நெடுந்தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிககையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News