உள்ளூர் செய்திகள்

ஊதிய உயர்வு வழங்கிடக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-06-27 11:39 IST   |   Update On 2022-06-27 11:39:00 IST
  • ஊதிய உயர்வு வழங்கிடக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் 102 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றிற்கு ரூ 385 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழி லாளர்களுக்கு ஆண்டுக்கொரு முறை ஊதியம் உயர்த்தி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ 449 ஊதியம் உயர்த்தி வழங்கிட மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில், நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இன்னும் பழைய முறைப்படியே ரூ385 வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதனைக் கண்டித்து ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி ஊதியம் உயர்த்தி வழங்கிடக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க அறந்தாங்கி கிளைச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்று வருகின்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதுஅலிஜின்னா, டி ஒய்எஃப்ஐ மாவட்ட தலைவர் கர்ணா, சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் 100க்கும் மேற்பட்ட ஓப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News