உள்ளூர் செய்திகள்

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்

Published On 2023-01-06 13:36 IST   |   Update On 2023-01-06 13:36:00 IST
  • பாலிதீன் கவர்களில் சந்தைப்படுத்தும் உணவுப் பண்டங்களை அனுமதிக்கிறார்கள்.
  • வியாபாரிகளை அச்சுறுத்தும் இந்த செயலால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுமலை :

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் உடுமலை வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பேசியதாவது:- பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்த அரசு பெரு நிறுவனங்கள் அவற்றை பயன்படுத்துவதை கண்டு கொள்வதில்லை. பெருநிறுவனங்கள் மக்கும் தன்மையற்ற பாலிதீன் கவர்களில் சந்தைப்படுத்தும் உணவுப் பண்டங்களை அனுமதிக்கிறார்கள்.

ஆனால் சிறு வணிகர் ஒருவர் கடலை மிட்டாயை பாலிதீன் கவரில் பொதிந்து விற்பனை செய்ய தடை விதிக்கிறார்கள். எனவே அரசு பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் சமமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொண்டு சேர்த்தவர்கள் வணிகர்களாகும்.ஆனால் அவர்களை திருடர்கள் போல நடத்துவது நியாயமற்றது. வியாபாரிகள் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி செலுத்தியே கொள்முதல் செய்கின்றனர்.

அப்படியிருக்கும் போது சில சூழ்நிலைகளில் சிறு வணிகர்கள் விற்பனை ரசீது வழங்காமல் விற்பனை செய்தாலும் அரசுக்கு இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால் டெஸ்ட் பர்ச்சேஸ் எனப்படும் சோதனைக் கொள்முதல் நடைமுறையை கொண்டு வந்து அதற்காக 75-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் திடீர் சோதனை நடத்தப்படுகிறது.

இதில் வியாபாரிகளுக்கு ரூ .20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. வியாபாரிகளை அச்சுறுத்தும் இந்த செயலால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த நடைமுறையை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விற்பனை ரசீது வழங்காமல் மது வகைகளை விற்பனை செய்து வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் வியாபாரிகள் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News