சிப்காட்டுக்கு எதிர்ப்பு: 50-வது நாளை எட்டும் போராட்டம்
- விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதுவரை அவர்களது போராட்டத்துக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உத்தனப்பள்ளி, நாகம ங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று 49-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விவசா யிகள் பிச்சைக்காரர்கள் போல் மொட்டை அடித்து கொண்டு கையில் மண் சட்டி மற்றும் கழுத்தில் காய்கறி மாலை அணிந்தவாறு சூளகிரி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.
அப்போது கீரனப்பள்ளி அருகே தாசில்தார் அனிதா மனுவை பெற வந்தார். ஆனால் தாலுகா அலுவலகம் வந்து தான் மனு கொடுப்போம் என விவசாயிகள் கூறினர். தாலுகா அலுவலகம் வரை நடந்து சென்ற விவசாயிகள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
நாளை விவசாயிகளின் போராட்டம் 50-வது நாளை எட்டும் சூழலில் இதுவரை அவர்களது போராட்டத்துக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.