உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள்

Published On 2022-12-26 13:45 IST   |   Update On 2022-12-26 13:45:00 IST
  • விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், அதனை மீறி நடத்தினால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
  • விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 23-ந் தேதியுடன் முடிந்து 24-ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந் தேதியும் மற்ற மாணவர்களுக்கு 2-ந் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், அதனை மீறி நடத்தினால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர். வழக்கமாக சீருடையில் வருவது போல் இல்லாமல் சாதாரண உடை அணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை முதல் மாலை வரை வகுப்பில் கலந்து கொள்கின்றனர்.

தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களை விடுமுறை நாட்களில் மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்க கூடாது என்ற நோக்கத்தில் அரசு அறிவித்தாலும் சில தனியார் பள்ளிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விடுமுறை நாட்களில் கூட தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News