உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்-2 மாணவன்: போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-07-26 10:08 GMT   |   Update On 2022-07-26 10:08 GMT
  • சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.
  • அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

திருத்தணி:

திருத்தணி, ஏரிக்கரை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டது, அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருடை மகன் சூரியபிரகாஷ் (வயது 17) என்பது தெரிந்தது.

அவர், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

பள்ளி முடிந்ததும் அவர் உடன் படிக்கும் திருத்தணி பகுதியை சேர்ந்த சக மாணவர்களுடன் ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. அப்போது சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

மாணவன் சூரிய பிரகாசின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News