உள்ளூர் செய்திகள்

செல்போன் பறித்து தப்பியபோது சிக்கினர்: நாட்டு வெடிகுண்டுடன் பிளஸ்-2 மாணவர்கள் கைது

Published On 2022-12-23 12:16 IST   |   Update On 2022-12-23 15:22:00 IST
  • மோட்டார்சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் திடீரென கருத்தபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.
  • நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிற்பக்கல்லூரி மாணவர் கருத்தபாண்டி. இவர் அதேபகுதியில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் திடீரென கருத்தபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பூஞ்சேரி கூட்டு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிற்பகல்லூரி மாணவர் கருத்த பாண்டியிடம் செல்போனை பறித்து தப்பி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவான்மியூர் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கத்தி, நாட்டு வெடிகுண்டு இருந்தன. அவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள், கத்தி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News