உள்ளூர் செய்திகள்

இன்று முதல் அனுமதி: கிருஷ்ணகிரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-09-14 15:33 IST   |   Update On 2022-09-14 15:33:00 IST
  • பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
  • இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணையில் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி,

கர்நாடகா மாநிலம் பெங்களூர், தென்பெண்ணை நீர்பிடிப்புகள், மார்கண்டேய நதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அதிகப்பட்சம் 20 ஆயிரம் கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. மேலும், அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், அணைக்குள் வந்து செல்ல பொதுப்பணித்துறை தடைவிதித்தனர்.

இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இருந்து அணையை பார்வையிட்டு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்து, அணைக்கு வரும் நீர்வரத்தும் படிபடியாக குறைந்து வருகிறது.நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து 3,924 கனஅடியாக இருந்தநிலையில், நேற்று காலை விநாடிக்கு 3,661 கனஅடியாக சரிந்தது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து 4,031 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால், இன்று முதல் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கிருஷ்ணகிரி அணையில் குவிந்தனர்.

Tags:    

Similar News