2வது முறையாக பொறுப்பேற்ற தி.மு.க. துணை பொதுசெயலாளர் ராசாவிற்கு பெரம்பலூரில் பிரமாண்ட வரவேற்பு
- சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆ.ராசா.எம்.பி.யை தி.மு.க. துணை பொதுச் செயலாளராக 2வது முறையாக அறிவித்தார்.
- பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை பொதுசெயலாளர் ராசாவிற்கு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
சென்னையில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஆ.ராசா.எம்.பி.யை தி.மு.க. துணை பொதுச் செயலாளராக 2வது முறையாக அறிவித்தார்.
திமுகவின் துணை பொதுசெயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று முதல் முறையாக பெரம்பலூருக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிற்கு திமுகவினர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர், சேலம், ஆத்தூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த துணை பொதுசெயலாளர் ராசாவிற்கு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் கோனேரிப்பாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் நகர திமுக சார்பில் நகர செயலாளரும், எம்எல்வுமான பிரபாகரன் தலைமையில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பெரம்பலூர் பழைய பஸ்டாண்டில் உள்ள காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு எம்பி ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடைவீதி, சங்கு, ரோவர் வளைவு, பாலக்கரை, நான்கு ரோடு வழியாக சென்று அரியலூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ராசா கலந்து கொண்டார்.
அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ராசாவிற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ராசா நன்றி கூறி பேசினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர்வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வக்கீல் ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.