வெங்காயத்தில் திருகல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- வெங்காயத்தில் திருகல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகசூல் இழப்பை ஏற்படுத்தும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகள் கடைபிடித்து திருகல் நோயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்திட தோட்டக்கலைத்துறை ஆலோசனை கூறியுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 215 ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர்ச்சியான தட்ப வெட்பநிலை மற்றும் மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந்நோயானது கொலிட்டோடிரைக்கம் குளோஸ்போரியாய்ட்ஸ் எனப்படும் ஒருவகை பூஞ்சை மூலம் தோன்றுகின்றது. இந்நோய் கொலிட்டோடிரைக்கம் கருகல் நோய், பறவைக் கண்நோய் எனவும் அழைக்கப்படும். இப்பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்கள் மடிந்து தொங்கும். அடுத்த கட்டமாக வெங்காயத்தின் கழுத்துபகுதி நீண்டு, குமிழங்கள் சிறுத்து காணப்படும். தாக்குதல் தீவரமானால் செடிகள் அழுகிவிடும்.
இந்நோயானது 50 முதல் 100 விழுக்காடு வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும், பாதிப்பிற்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். இதற்கு இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அப்புறப்படுத்திவிட்டு பூஞ்சாணக் கொல்லிகளை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு கார்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி ஒரு கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
மாற்றாக புரோபிகோனசோல் 25 இசி அல்லது ஹெக்சகோனசோல் 5 இசி இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாக தெளிக்கலாம். பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
இப்பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை பெற்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்துவிட வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எனும் உயிரியல் கட்டுப்பாடு காரணியை 1 கிலோ எடுத்து 100 கிலோ மக்கிய எருவில் கலந்து நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.