உள்ளூர் செய்திகள்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-06 08:23 GMT   |   Update On 2022-09-06 08:23 GMT
  • மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 211 மனுக்களை பெற்றார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். காலத்துக்கு ஏற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து, முழு நேர ஊழியர்களாக்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகை செலவுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். போக்குவரத்து படி, உணவு படி, மருத்துவ உபகரணம் பராமரிப்பு படி வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு படி வழங்க வேண்டும். ஊழியர்களின் பணிகளில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்தி சுதந்திரமாக பணியாற்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 211 மனுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News