சாட்சியம் அளிக்க வராத டாக்டருக்கு பிடிவாரண்டு
- சாட்சியம் அளிக்க வராத டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டன.
- நீதிபதி அதிரடி உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வெள்ளையம்மாள் (வயது 67). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது பெருமத்தூர் வாய்க்கால் பாலம் அருகே இவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த வெள்ளையம்மாள் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வெள்ளையம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியமளிக்க கோர்ட்டுக்கு வருமாறு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் சம்மனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பணி மருத்துவரை கோர்ட்டுக்கு சாட்சியமளிக்க அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் நீதிபதி, தனியார் மருத்துவமனையின் பணி மருத்துவருக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், வரும் 28-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.