உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற தலைமை காவலருக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

Published On 2022-09-08 07:25 GMT   |   Update On 2022-09-08 07:27 GMT
  • ஓய்வுபெற்ற தலைமை காவலருக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
  • காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு

பெரம்பலூர்:

பெரம்பலூரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). இவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. சுப்ரமணியன் 2003-ல் போலீஸ்துறையில் இருந்து ஓய்வுபெற்றபிறகு மாவட்ட கருவூல அலுவலகம் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகிறார். சுப்ரமணியன், அரசு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவக்காப்பீட்டுக்கான பிரீமிய தொகையும், சந்தாவும் முறையாக செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுப்ரமணியன் மனைவி ரெத்தினாம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுப்ரமணியன் ரூ.3 லட்சம் வரை மருத்துவசெலவு செய்துள்ளார்.

இதனால் மனைவியின் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்கவேண்டி பெரம்பலூரில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தில் சுப்ரமணியன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் தங்களது நெட்ஒர்க் வரையறையில் ரெத்தினாம்பாள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை பட்டிலுக்குள் இல்லை என்று கூறி மருத்துவக்காப்பீட்டு தொகை வழங்ககாப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. சிகிச்சை பலனின்றி ரெத்தினாம்பாள் கடந்த 2021ம் ஆண்டு பிப்.19ம்தேதி இறந்துவிட்டார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த சுப்ரமணியன் நஷ்ட ஈடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பெரம்பலூர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின்கிளை மேலாளர் மற்றும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தின் கோட்ட மேலாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர், சுப்ரமணியன் மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவிற்குரிய காப்பீட்டுத்தொகையாக ரூ.2 லட்சமும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக சுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் மேற்கண்ட தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்துவழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

Tags:    

Similar News