உள்ளூர் செய்திகள்

'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற 10 பேருக்கு அரசு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்பு

Published On 2022-09-09 09:17 GMT   |   Update On 2022-09-09 09:17 GMT
  • ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற 10 பேருக்கு அரசு உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
  • 6 பேர் முதன்முதலாக எழுதினர்

பெரம்பலூர்:

இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த 263 மாணவ-மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 23 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 286 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 15 மாணவர்களும், 30 மாணவிகளும், அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளும் என மொத்தம் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு இட ஒதுக்கீடு

தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 7 மாணவிகளும், 3 மாணவர்களும் என மொத்தம் 10 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த 10 பேரில் 6 பேர் முதல் முறையாக எழுதிய 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் முதல் மதிப்பெண் 399 ஆகும். அந்த மதிப்பெண்ணை சுபாஷினி என்ற மாணவி பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 188 மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியதில், 25 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 6 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்."

Tags:    

Similar News