குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி
- மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
- சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை உள்ளது.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சி பகுதியில் ஆதித்திராவிட தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை போட்டு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கற்கள் கப்பிகள் பெயர்ந்து குண்டு குழியுமாகவும் சாலையாக மாறியது. இந்த சாலை தற்சமயத்தில் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அதுவும் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், மருத்துவமனை செல்வோர் கடும் சிரமத்தை கடந்து செல்கின்றனர்.
மேலும் சாலையில் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து இருப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்கள் சில அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலைமையும் உள்ளது.
மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நின்று எங்கு பள்ளம் உள்ளது என தெரியாமல் பலர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
புதிய சாலை போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.