உள்ளூர் செய்திகள்

பகுதி நேர வேலை, கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்குகளை பெற்று மோசடி செய்யும் வடமாநில கும்பல் -புரோக்கராக செயல்பட்ட தருமபுரி வாலிபரிடம் விசாரணை

Published On 2022-12-06 08:31 GMT   |   Update On 2022-12-06 08:31 GMT
  • பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வாலிபர்களை ஏமாற்றி வருகிறது.
  • தருமபுரி வாலிபரை அவர்கள் புரோக்கராக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

தருமபுரி,

கடன் வாங்கி தருவது,வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலை வாங்கித்தருவது என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் சமீபத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வாலிபர்களை ஏமாற்றி வருகிறது.

அந்த வகையில் பாதிக்க ப்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:-

செல்போன் செயலி மூலம் ரூ.3,500 கடன் கேட்டேன். அதற்காக அவர்கள் எனது ஆதார் எண், செல்பி போட்டோ ஆகியவை கேட்டனர். அவற்றை அனுப்பி வைத்து நான் கடன் பெற சம்மதித்தேன். செல்போன் செயலி மூலம் வாங்கிய கடனை நான் 7 நாட்களில் ரூ.5 ஆயிரமாக திருப்பி செலுத்தினேன்.

இருப்பினும் அவர்கள் மேலும் பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் உங்களது போட்டோவை மார்பிங் செய்து செல்போன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைப்போம் என்று மிரட்டுகின்றனர். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் செயலி மூலம் பெற்ற கடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது. அந்தக் வங்கி கணக்கு எண் யாருடையது என்று விசாரித்த போது அது தருமபுரியை சேர்ந்த ஒரு வாலிபரின் வங்கி கணக்கு என்று தெரியவந்தது.

இதனை அடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தருமபுரி வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பல் வாலிபர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளை அரங்கேற்றி வருவதும், தருமபுரி வாலிபரை அவர்கள் புரோக்கராக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

இதேபோல மேலும் பல வாலிபர்கள் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இது போன்ற கடன் வாங்கி தருவது,வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலை வாங்கித்தருவது என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News