உள்ளூர் செய்திகள்

பரப்பலாறு அணை வேகமாக நிரம்பி வரும் காட்சி.

வடகாடு மலைப்பகுதியில் தொடர் மழையால் நிரம்பி வரும் பரப்பலாறு அணை

Published On 2022-11-06 10:24 IST   |   Update On 2022-11-06 10:24:00 IST
  • பரப்பலாறு அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். தற்போது 78.95 அடி தண்ணீர் அணையில் உள்ளது.
  • திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, வடகாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. பரப்பலாறு அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். தற்போது 78.95 அடி தண்ணீர் அணையில் உள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். அணையில் தற்போது 113.25 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 60 கன அடி வெளியேற்றப்படுகிறது.

பரப்பலாறு அணையின் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தாசரிபட்டி முத்துபூ பாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், பெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என வடகாடு மலைப்பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராமசபை கூட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பரப்பலாறு அணை நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News