பரமத்தி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பரமத்தி அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா
- பரமத்தி அங்காளம்மன் கோவிலில் மாசி மகா சிவாரத்தி விழா, ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.
- இந்த ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மாலை காப்பு கட்டு நிகழ்ச்சியும், 17-ந் தேதி மொகமிட்ட கொப்பரை பூஜையும், 18-ந் தேதி இரவு மகா சிவராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அங்காளம்மன் கோவிலில் மாசி மகா சிவாரத்தி விழா, ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மாலை காப்பு கட்டு நிகழ்ச்சியும், 17-ந் தேதி மொகமிட்ட கொப்பரை பூஜையும், 18-ந் தேதி இரவு மகா சிவராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
19-ந் தேதி அதிகாலை கரகம் பாவித்து சுமார் 5 கிலோ எடையுள்ள 3 அடி நீளமுள்ள கத்தியை கரகத்தில் நிற்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை குடிபாட்டு மக்களும், பக்தர்களும் கண்டு வழிபட்டு சென்றனர். பின்னர் அழகு தரிசனம் நடைபெற்றது. இதில் 14 சமுதாய குளிப்பாட்டு மக்கள், கோவில் பூசாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு பிள்ளைப்பாவை நிகழ்ச்சியும், இன்று மாலை 5 மணிக்கு மேல் மயான கொள்ளை மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை 6 மணிக்கு மேல் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.