உள்ளூர் செய்திகள்

சுவாமி திருவீதி உலா

சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயில் -100 ஆண்டுக்கு பின் நடந்த பங்குனி உத்திர திருக்கல்யாணம்

Published On 2023-04-06 22:16 IST   |   Update On 2023-04-06 22:16:00 IST
  • சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
  • அகத்திய முனிவர் வந்து பூசித்து இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தைத் தரிசித்தார்.

சிறுவாபுரி:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோவில் புராண காலத்தில் ஸ்ரீ இராமபிரானின் மைந்தர்களாகிய லவகுசர்கள் வந்து வணங்கிய சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் வந்து பூசித்து இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தைத் தரிசித்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்திரன் தேவருலகை மீட்டெடுக்க இக்கோவிலுக்கு வந்து தவஞ்செய்த புண்ணிய திருத்தலமும் ஆகும். இதனால் இங்கு வந்து வணங்கினால் கல்யாணத் தடைகள் நீங்கும், இழந்த பதவிகள் கிடைக்கும், வீடு-நிலம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பங்குனி உத்திரம் திருநாளில்தான் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் செய்வது சிறப்பு ஆகும். இந்த புராண வரலாற்றை முன்னிட்டு உலகெங்கும் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண உற்சவம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இக்கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் நல்லெண்ணை, பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், எலுமிச்சை, இளநீர், மாதுளை உள்ளிட்ட 27 வகை பொருட்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின், திருக்கல்யாண உற்சவத்திற்குத் தேவையான சீர்வரிசை பொருட்களை இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து ஊர்வலமாக கிராம மக்கள் கொண்டு வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க நேற்று இரவு

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரருக்குத் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதன்பின், இடப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கல்யாண பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில், சிறுவாபுரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News