உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3½ லட்சம் இழந்த என்ஜினீயர் தற்கொலை

Published On 2023-01-13 02:56 GMT   |   Update On 2023-01-13 02:56 GMT
  • என்ஜினீயரான பாலன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா்.
  • எனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தட்டப்பாறை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகன் பாலன் (வயது 30). என்ஜினீயரான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா். கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் அவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பாலன் வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாலனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பாலன் தனது நண்பர் ஒருவருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால், அந்த குறுஞ்செய்தி செல்லாத நிலையில் இருந்து உள்ளது. அதனை போலீசார் பார்த்தனர். அதில், எனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன். என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து தனது வங்கி கணக்கில் செலுத்த கூறி உள்ளார். ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி உள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.3½ லட்சம் வரை இழந்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News