உள்ளூர் செய்திகள்

போகிப்பண்டிகையன்றுடயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2023-01-13 09:59 GMT   |   Update On 2023-01-13 09:59 GMT
  • பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
  • இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களை த ெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு, நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சு புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

மேலும், உயர்நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, புகை நமக்கு பகை என்பதை உணர்ந்து போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர்,

பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம். போகிப்பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.

அன்று குப்பையை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளை மிகழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம்.

இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News