- குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
- பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் சின்னக்குண்டு என்ற சரவணக்குமார் (வயது 36).
பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையம் மற்றும் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்பட 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஆனால் குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இதையடுத்து சரவணக்குமாரை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மருத்துவ கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.