உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் பிரியாணி கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக நோட்டீஸ் :திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு அபராதம்

Published On 2023-11-18 13:57 IST   |   Update On 2023-11-18 13:57:00 IST
  • சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தாக அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
  • பிரியாணி கடைக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்த செய்தி வெளியே வரவே இன்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் செல்வம், சரவணக்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த குழுவினர் சமையல்அறை மற்றும் உணவு பரிமாற பயன்படுத்தப்படும் பாத்திரம், உணவு பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் இருந்ததற்காக 32, 63, 58 ஆகிய பிரிவுகளின்கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிரியாணியின் தரத்தையும் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை சென்னை கிண்டியில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சுகாதார குறைபாடு தொடர்பாக 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.

Tags:    

Similar News