உள்ளூர் செய்திகள்

கடையடைப்பு போராட்டம் - தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ஆதரவில்லை

Published On 2022-10-29 18:14 IST   |   Update On 2022-10-29 18:14:00 IST
  • கோவையில் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ஆதரவில்லை.
  • கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி என்றார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

கோவை:

கோவையில் நடந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக வரும் 31-ம் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட கிளை சார்பாக அதன் தலைவர் எஸ்.எம் முருகன் தலைமையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டல் அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை விரைவாக செயல்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளதாகவும், கோவை நகரை பொறுத்த வரை அசம்பாவிதங்களைத் தடுப்பதே காவல் துறையின் பணி எனவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.முருகன் பேசுகையில், கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி கடைகள் அடைப்பு என சில அரசியல் கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து எங்களிடம் கலந்து பேசி போராட்டத்தை அறிவிக்கவில்லை என்பதால் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. எனவே கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கீழ் வரும் சுமார் 30,000 கடைகளும் 31-ம் தேதி செயல்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News