வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு குட்கா கடத்திய வடமாநில வியாபாரி கைது
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடையில் விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரியவந்தது.
- 89 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் நீலாம்பூர் பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா வியாபாரம் நடந்து வருவதாக கோவை மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கிவரும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடையில் விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரியவந்தது.
பெட்டி கடையில் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபருக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனேஷ்வர் சிங் என்ற நபர் குட்கா பொருட்களை அவ்வப்போது கொண்டுவந்து விற்பனை செய்து கொடுக்குமாறு கொடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அதே பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்த தானேஸ்வர் சிங்கை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவரிடம் இருந்து 89 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்