உள்ளூர் செய்திகள்

பழனி முருகன் மலைக்கோவில் (கோப்பு படம்)

பழனி முருகன் கோவிலில் உண்டியல் நாணயங்களை பிரிக்க புதிய எந்திரம்

Published On 2023-01-05 10:44 IST   |   Update On 2023-01-05 10:44:00 IST
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர்.
  • 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

பழனி:

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் பலர் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறியவுடன் காவடி எடுத்தும், தங்கதேர் இழுத்தும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியலில் போடுகின்றனர். இந்த உண்டியல் குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அவ்வாறு கிடைக்கும் வருவாய் அன்னதானம் மற்றும் கோவில் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளுடன் பலவகை நாணயங்களும் உண்டியலில் போடப்படுகிறது.

அவற்றை எண்ணுவதற்காக வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 2 அளவுகளில் நாணயங்களை பிரிக்க ஒரு எந்திரம் கோவிலில் உள்ளது.இருப்பினும் காணிக்கை நாணயங்களை பிரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் 5 அளவுள்ள நாணயங்களை தனித்தனியாக பிரிக்க புதிய எந்திரம் ரூ.2.5 லட்சம் மதிப்பில் கோவையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்டியல் என்னும் பணி எளிதாகவும், விரைவாகவும் நடக்கும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News