உள்ளூர் செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.

மஞ்சவாடி கணவாய் அருகே நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு

Published On 2022-09-01 09:49 GMT   |   Update On 2022-09-01 09:49 GMT
  • உயர்மட்ட பாலத்தின் மேல் சுமார் 3 அடி அளவிற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  • ஒரு சில சிறிய ரக கார்கள் இந்த வெள்ளத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றன.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மற்றும் ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், அரூர்-சேலம் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏற்காடு மலையில் இருந்து வருகின்ற வெள்ளம் மஞ்சவாடி பகுதியில் சிற்றாறாக உருவெடுத்து பீனியாற்றில் கலக்கிறது. இதில் மஞ்சவாடி அருகே ஆறு அடி உயர்மட்ட பாலத்தின் மேல் சுமார் 3 அடி அளவிற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அரூர்-சேலம் பிரதான சாலையில் செல்கின்ற வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றது. மேலும் இரு சக்கர வாகனங்கள், ஒரு சில சிறிய ரக கார்கள் இந்த வெள்ளத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றன .

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த நிலை நீடித்தது. மேலும் சேலம் பிரதான சாலையில் மரம் ஒன்று சாய்ந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதி முழுவதும் விவசாய நிலங்கள், கால்வாய்கள், ஏரிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News