மத்தூர் அருகே விவசாயி வீட்டில் திருடிய ஆட்டை விற்க முயன்றபோது சிக்கிய திருடன்
- 5 ஆடுகளில் 2 ஆடுகளை காணவில்லை.
- விற்க முயன்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயுடு குருகு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கமலேசன் (வயது 60).விவசாயியான இவர் தனது வீட்டில் 5 ஆடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு ஆடுகளை வீட்டில் கொண்டு வந்து கட்டிப்போட்டார். பின்னர் தூங்கச்சென்று விட்டார்.
திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 5 ஆடுகளில் 2 ஆடுகளை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மத்தூர் போலீசில் கமலேசன் புகார் செய்தார். இந்நிலையில் ஊத்தங்கரையில் நடந்த ஆட்டுச்சந்தையில் கமலேசன் வீட்டில் திருடு போன 2 ஆடுகளை ஒரு மர்ம ஆசாமி விற்க முயன்றது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ஆடுகளை மீட்டு விற்க முயன்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கோடலவலசல் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 53 ) என்பதும், ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.