உள்ளூர் செய்திகள்

பெண் என்ஜினீயர் வசுமதி

நாமக்கல் பெண் என்ஜினீயர் தற்கொலை: 3-வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2022-12-11 11:04 GMT   |   Update On 2022-12-11 11:04 GMT
  • கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
  • போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் 26 -ம் தேதி வசுமதி, தனது பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்டு திருமணமாகி வந்த நாளில் இருந்து தன்னிடம், கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்து வருகிறார்கள். என்னை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். தினமும் டார்ச்சர் செய்வதால் என்னால் இங்கு வாழ முடியாது. என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி கதறி அழுதார்.

இதனால் அத்தியப்பன் நல்லிபாளையம் சென்று தனது மகள் வசுமதியை அழைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்தார். இந்த நிலையில் மன வேதனையில் இருந்த வசுமதி கடந்த 30 -தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வசுமதி பரிதாபமாக உயிரிழந்தார் .

இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.

இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்தால் தான் வசுமதி, உடலை வாங்குவோம் என கூறி உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வசுமதியின் கணவர் வினோத் உள்பட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

இன்று 3-வது நாளாக வசுமதியின் பெற்றோர் தனது மகள் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை மகளின் உடலை பெறமாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் 3-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் 4 பேரையும் பிடிக்க தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News