உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி சாவு எதிரொலிஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2023-09-20 07:10 GMT   |   Update On 2023-09-20 07:10 GMT
  • தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

நாமக்கல்:

நாமக்கல் பரமத்தி ரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் கடந்த 16-ந் தேதி ஷவர்மா உள்ளிட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவி இறந்தார்

இதில் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி கலையரசி (14) என்பவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் உமா ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மேலும், சம்மந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று சோதனை நடத்தி அந்த கடையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.

4 பேர் கைது

மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் கடை உரிமையாளர் நவீன்குமார், ஓட்டலின் சமையல் தொழிலாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஓட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த ராமாபுரம்புதூர் பகுதியில் உள்ள கறிக்கோழிக் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உரிமையாளர் சீனிவாசன் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விற்பனைக்கு தடை

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சி கடைகள், கறிக்கோழிக் கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிடவும் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நேற்று முதல் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம்

குமாரபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 9 கிலோ கிரில் சிக்கன், குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட 4 கிலோ பிரியாணி, 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அபராதமாக ரூ.7 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 2 ஓட்டல்களில் இருந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன சுமார் 250 கிலோ எடையுள்ள பழைய இறைச்சி, மீன் துண்டுகள், ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது.

இதேபோல் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சிங்கார வேலன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள 21 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் உரிமம் பெறாமல் இயங்கிய 2 ஓட்டல்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உடன் இருந்தனர்.

பள்ளிப்பாளையம்

பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அசைவ ஓட்டலில் நேற்று ஈரோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மொத்தம் 19 அசைவ ஓட்டிலில் ஆய்வு மேற்கொண்டு 3 ஓட்டலில் கெட்டுபோன 7½ கிலோ கோழி இறைச்சி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 3 ஓட்டலுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதேபோல் இன்றும் சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

Similar News