மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
- ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலை மற்றும் விவசாய தோட்டங்களை சேதப்படுத்துதல் சம்பவம் நடைபெற்று வருகின்றன.
வாழைகள் வெட்டி சாய்ப்பு
அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி என்கிற சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகன்யா, பரமத்தி வேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி (பரமத்தி வேலூர்), ரவி (பரமத்தி), செல்வராஜ் (வேல கவுண்டன்பட்டி) மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி,வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் பதிவான பதிவுகளை வைத்தும், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜேடர்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் யாராவது வாழை மரம் வெட்டிய சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.