கொடைக்கானலில் கிரகணத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் உலக்கையை நிறுத்தி உணர்த்திய பாட்டி
- கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாலை 3 மணி.46 நிமிடத்திற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகி இருந்தது.
- உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த நாகரத்தினம் என்ற மூதாட்டி அதனை செய்து காட்டினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சந்திரகிரகணத்தினை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் கண்டு ரசிக்க அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
2 பெரிய தொலைநோக்கிகளில் சந்திரகிரகணத்தினை காண்பதற்கு ஏற்பாடுகள் மற்றும் வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கட்டணமின்றி கண்டு ரசித்து செல்லலாம் என வான் இயற்பியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாலை 3 மணி.46 நிமிடத்திற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகி இருந்தது. இதனை தொடர்ந்து ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தென்படும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர்.
ஆனால் மலைப்பகுதியில் அடர் பனி மூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை பெய்ததால் சந்திரகிரகணம் தென்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ மாணவியர்கள், பொதுமக்களை அரங்கில் அமர வைத்து யூடியூப் சேனல் மூலம் சந்திர கிரகணத்தை நேரலையாக ஒளிப்பரப்ப செய்து கிரகணம் ஏற்படும் முழு விவரங்களையும் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.
மேலும் இது குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.
கிரகணம் நடைபெறும் சமையத்தில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த நாகரத்தினம் என்ற மூதாட்டி அதனை செய்து காட்டினார். கிரகண சமயத்தில் உலக்கை நின்று முடிந்ததும் அது சாய்ந்து விழுந்தது.