நத்தத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள் பங்கேற்பு
- நத்தம் மாரியம்மன் கோவிலில் காலை 11.30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2007 -ம் ஆண்டிற்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தின் திருப்பணிகளை சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், மனைவி பிரேமா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்தனர்.
இதையடுத்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 4ந் தேதி முதல் நேற்று 7-ந்தேதி காலை வரை பல கட்டமாக ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11.30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, இந்து சமய அறநிலையத்துறை இணைக் கமிஷனர் பாரதி, வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,
அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜா சீனிவாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.