உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூரில் பெய்த மழையால் வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கி உள்ள காட்சி.


தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை-செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் தேங்கிய நீரால் வியாபாரிகள் பாதிப்பு

Published On 2022-06-16 09:17 GMT   |   Update On 2022-06-16 09:17 GMT
  • வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
  • மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

செய்துங்கநல்லூர்:

வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சரவணசெல்வி (வயது 40). அந்தப்பகுதியில் இவர்ளுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சரவணசெல்வி பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜர் புதூர், சேரகுளம், காரசேரி, நாட்டார்குளம் உள்பட பல்வேறு பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.

செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய கொண்டு வருவார்கள். அதே போல் செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள்.

திடீரென பெய்த மழையால் இந்த வார சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தெருச்சாக்கடைகள் அனைத்தும் வாரச்சந்தையில் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சந்தைக்கு வந்த பொதுமக்கள் மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

சாயர்புரத்தை சுற்றியுள்ள முள்ளன்விளை , புளியநகர், செபத்தையாபுரம், நடுவைகுறிச்சி, சுப்பிரமணியபுரம், நந்தகோபாலபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News