கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு ஆம்னி பஸ்சில் குட்கா கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் கைது
- சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஆம்னி பஸ்சில் குட்கா மதுரைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்இ-ன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் பஸ் ஒன்று பெங்களுருவில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கொண்டு வந்தததாக தனியார் டிராவல்ஸ் பஸ்சின் டிரைவரான கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரகாஷ் நகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), பெங்களூரு பீஜ்பூர் பசந்த் பாத்தியா பகுதியை சேர்ந்த பாபு (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் குட்கா மதுரைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.