உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-06-21 09:10 GMT   |   Update On 2022-06-21 09:10 GMT
  • ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
  • சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 6-ந் தேதி வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

16-ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், டி.எஸ்.பி. பாலசுந்தரம், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், ஜெனகை டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியன் செட்டியார், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன், கோவில் செயல்அலுவலர் இளமதி மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளைக்கொடி வீசினர். கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக வருவதற்கு ஒழுங்குபடுத்தினர். வழிநெடுக பக்தர்கள் அம்மனை வரவேற்று பூஜை செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலம் சரவணன், சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் மருதுபாண்டியர், சத்யபிரகாஷ், குருசாமி, ஈஸ்வரி, ஸ்டாலின் முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்

தேர்த்திருவிழாவில் பக்தர்கள் மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை சூறை விட்டனர். சிறுவர், சிறுமிகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, இளங்கோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு வட்ட பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சார்பில் 9-வது ஆண்டாக அன்னதானம் நடந்தது. இதில் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சோழவந்தான் அய்யப்பன் கோவிலில் இன்று இரவு காவல்துறை பேண்டு வாத்திய கச்சேரி நடைபெறுகிறது. சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News